விருது வழங்கும் விழா ஒன்றில் சக நடிகையை விமர்சித்து சிம்ரன் காட்டமாகப் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை சிம்ரன் குட் பேட் அக்லி மூலம் மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில், விழா மேடை ஒன்றில் அவர் அவர் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது. பெயரைக் குறிப்பிடாமலேயே சக நடிகை ஒருவரை அவர் விமர்சித்துள்ளார். ஆனால், ஜோதிகாவை குறிப்பிட்டுதான் சிம்ரன் பேசினார் என ரசிகர்கள் அதை அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள்.
“அண்மையில், சக நடிகை ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். உங்களை இந்தக் கதாபாத்திரத்தில் பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது என்றேன். அதற்கு அவர், ‘ஆன்டி (வயதுமூப்பு) கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு இதுவே பரவாயில்லை’ என்றார். முற்றிலும் பொறுப்பற்ற பதில் இது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ‘டப்பா’ கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட ஆன்டி கதாபாத்திரங்கள், முக்கியத்துவம் வாய்ந்த ஆன்டி கதாபாத்திரங்களில் நடிக்கலாம். நாம் எதைச் செய்ய விரும்புகிறோமோ அதில் நமக்கு நம்பிக்கை வேண்டும்” என்று சிம்ரன் சற்று கோபமாகப் பேசினார்.
இதில் ஜோதிகாவை ரசிகர்கள் உள்ளே இழுப்பதற்குக் காரணம், அவர் அண்மையில் டப்பா கார்டெல் எனும் இணையத் தொடரில் நடித்திருந்தார். சிம்ரன் உண்மையில் யாரைச் சொன்னார் என்பது அவரே எங்காவது வெளிப்படையாகக் கூறினால் தான் தெரியவரும்.