விஜய்யிடம் அவருடைய கடைசி படம் பற்றி நடத்திய உரையாடலை நடிகை மமிதா பைஜூ வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளது சமூக ஊடகங்களில் டிரென்ட் அடித்து வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதைத் தொடர்ந்து, சினிமாவிலிருந்து விலகி தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்தப்போவதாக அறிவித்தார். “அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாகக் கருதுகிறேன்”. இது விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிக்கையின்படி, ஜன நாயகன் படமே அவருடைய கடைசி படம். ரசிகர்கள் அப்படி தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஜன நாயகன் படத்தில் நடித்துள்ள மமிதா பைஜூ, அவரிடம் கடைசி படம் பற்றி கேட்டுள்ளார். அவரும் இதற்குப் பதிலளித்திருக்கிறார். இதை அயர்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மமிதா பைஜூ வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளார்.
“விஜய் சாரிடம் நான் நேரடியாகக் கேட்டேன். இது (ஜன நாயகன்) கடைசி படமாக இருக்குமா? எல்லோரும் இது தான் கடைசி படம் என்கிறார்கள் என்றேன். அதற்கு, ‘தெரியவில்லை, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பார்க்கலாம்’ என்று விஜய் சார் பதிலளித்தார்” என்று மமிதா பைஜூ கூறினார். தனிப்பட்ட முறையில் விஜய் சொன்னதை இப்படி மேடையில் போட்டு உடைக்கலாமா என விஜய் பிரியர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.
Leave a Reply