மனுசி படம் தொடர்பாக வெற்றி மாறன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் மனுசி. வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
மனுசி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் கடந்தாண்டு செப்டம்பரில் மறுத்தது. அரசை எதிர்மறையாகக் காண்பிப்பது, கம்யூனிசம் பற்றி குழப்பத்தை உண்டாக்குவது போன்ற காரணங்கள் தணிக்கை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து படத் தயாரிப்பாளர் வெற்றி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். தேவைப்பட்டால், படத்தை எடிட் செய்யவும் தயார் என்று வெற்றி மாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்புடைய வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகள்/வசனங்கள்/காட்சிகள் உள்ளிட்டவற்றை எடிட் செய்து சமர்ப்பித்தால், கருத்தில் கொள்ளப்படும் என தணிக்கை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இதன் அடிப்படையில் வெற்றி மாறனின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆட்சேபனைக்குரிய காட்சிகள் என்று தணிக்கை வாரியம் கூறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இருப்பதாக வெற்றி மாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் இதுதொடர்புடைய ஆட்சேபனைகளுக்கு இடமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. மேலும், முறைப்படி சரியான முறையில் மனுவைத் தாக்கல் செய்து தணிக்கை வாரியம் கூறியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Leave a Reply