மாமன் திரைப்படம் 30 நாள்களை எட்டக் காரணம் என்ன என்பது குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விலங்கு தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி மாமன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடன் நடித்திருந்தனர்.
உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள் குறித்துப் பேசிய இப்படம், குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 30 நாள்களை எட்டியுள்ள நிலையில், இதற்கு காரணம் யார் என்பதைக் குறிப்பிட்டு நடிகர் சூரி நெகிழ்ச்சியாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
”இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30வது நாளை எட்டியது! இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்கள் அன்புக்கே! வார்த்தைகள் போதவில்லை. மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்.
படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது. ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது. இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
சூரி தற்போது அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடித்துவரும் நிலையில், தான் எழுதிய கதை படமாகி அது 30 நாள்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடியுள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.
Leave a Reply