பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி புதிய படத்தில் மீண்டும் இணையவுள்ளார்கள்.
சென்னையில் நடைபெற்ற தனது மார்கன் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் விஜய் ஆண்டனி.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியானது பிச்சைக்காரன். இப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்துக்குப் பிறகு சசி மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து படம் செய்யவில்லை.
இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளார்கள். விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தில் அவருடைய தங்கை மகன் அஜய் திஷானும் நடிக்கிறார். மேலும், லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ்பெற்ற சுவாசிகாவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சசியின் மற்றொரு வெற்றிப் படமான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தைத் தயாரித்த அபிஷேக் ஃபிலிம்ஸ் இப்படத்தையும் தயாரிக்கிறது. மற்றபடி, இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர் தர்ஷன் கிர்லோஷ் உள்ளிட்டோரும் படத்தில் இணைந்துள்ளார்கள்.
விஜய் ஆண்டனியின் மார்கன் படம் வரும் ஜூன் 27-ல் வெளியாகிறது. அண்மையில் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் லாயர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதன் படப்பிடிப்பும் ஜூனில் தொடங்குகிறது. எனவே, சசி இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ள படத்தின் பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் வரும் நாள்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
Leave a Reply